வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

Thathathreyar - மூன்றுமுக தத்தாத்ரேயர்.

Thathathreyar - மூன்றுமுக தத்தாத்ரேயர்.

    அத்திரி முனிவரின் உத்தம பத்தினியான அனுசூயைக்கு, ஒரு சமயம் மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஒரு வரமளிக்க முன்வந்தனர். அதை ஏற்றுமும்மூர்த்திகளும் ஒரே உருவாக சேர்ந்து, தனக்குப் பிள்ளையாக பிறக்க வேண்டும்என்ற வரத்தை அனுசூயை கேட்டாள். அதன்படி மூன்றுமுகம் கொண்டு பிறந்தவர்தான் தத்தாத்ரேயர்.



இவருக்கு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், காலா - துங்கர் சாலையில், வறண்ட காட்டுப் பகுதியில் ஒரு கோயில் இன்றும் உள்ளது. இக்கோயிலில் தத்தாத்ரேயர், சிலை வடிவில் அழகாக காட்சியளிக்கிறார்.

      இந்த ஆலயத்தில், பூஜை முடிந்ததும் பூசாரி, தன் கையில் உணவுகளையும் ஒரு தட்டையும் எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள குன்றின் மீது ஏறி, தட்டின் மூலம் ஓசை எழுப்பி, ‘லீ ஊங்கா, லீ ஊங்கா’ (வந்து சாப்பிடுங்கள் வந்து சாப்பிடுங்கள்) என்று கூப்பிட்டு விட்டு உணவுகளை அங்கேயே வைத்து விட்டு கோயிலுக்கு திரும்பிவிடுகிறார்.



சில நிமிடங்களுக்குள் முதலில் ஒரு வெள்ளை நரியும், அதைத் தொடர்ந்து மற்ற நரிகளும் வந்து உணவுகளை தின்று விட்டுச் சென்று எங்கோ மறைந்து விடுகின்றன. மிச்சம் மீதி உணவை பறவையினங்கள் சாப்பிடுகின்றன.


இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, தத்தாத்ரேயர் கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு இனிப்பு கலந்த உணவை பிரசாதமாக வழங்குகிறார் பூசாரி.



தத்தாத்ரேயரை வழிபட்டால், மலட்டுத்தனம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

தீராத வயிற்று வலி, இதய நோய், புத்திக்கோளாறு, எதிரிகளின் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

காட்டுப்பகுதியில் இருப்பதால் இக்கோயிலுக்கு பக்தர்கள் பகலில் மட்டும் வந்து, அவரை வணங்குகின்றனர்.



இறைவன் வழிபாட்டில் தானம் என்பது ஒரு பகுதியே. அதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் இந்த தத்தாத்ரேயர் தவிர, உலகில் வேறு யாருமில்லை என்றே கூறலாம்.



இவரது, கோயில் உள்ள இடம் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருப்பதால், சுலபமாக பக்தர்கள் அங்கு செல்லமுடியாது. கெடுபிடிகள், அனுமதி என்று சிரமங்கள் இருக்கும்.


தலபுராணம்!
தத்தாத்ரேயர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தபோது, அங்கு நடமாடி வந்த ஒரு வெள்ளை நரி, மற்ற நரிகள் மற்றும் பறவையினங்களுக்கும் தினமும் உணவளித்து வந்தார். ஒரு சமயம் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால், அவற்றுக்கு உணவளிக்க முடியவில்லை.



ஒருநாள் அவரிடம் பசியுடன் வந்த நரிகள் மற்றும் பறவையினங்களைப் பார்த்து, நான் இங்கே அமர்ந்து கொள்கிறேன். என்னையே கடித்துத் தின்று உங்கள் பசியை தீர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். 


நரிகளும் பறவையினங்களும் அவரது உடலை தினம் தினம் கடித்துத் தின்று பசியாறின. அவர் தம் கடைசி தருணத்தில், இறைவா என் காலத்துக்குப் பிறகு உணவுப் பஞ்சம் தீர்ந்து சுபிட்சம் ஏற்படும்போது, இந்த நரிகளுக்கும் பறவையினங்களுக்கும் தினசரி தவறாமல் உணவு கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அதனாலேயே, இன்றும் பூஜை முடிந்ததும், அவற்றுக்கு முதலில் உணவளிக்கப் படுகிறது என்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக