சனி, 10 செப்டம்பர், 2016

'' விதை'' குறும்படத்தை முன்வைத்து

                 காசு  செடியின் மீது ஊடாடும்  மின்னல் கொடிகள்
                         '' விதை''  குறும்படத்தை  முன்வைத்து



                     

     மனித வாழ்வென்பது எத்தனையோ  கனவுகளும்  கற்பனைகளும்  உள்வாங்கிக்கொள்ளும்  இதயமையமாக  தோன்றுகிறது .அந்த கனவுகளும்  கற்பனைகளும் அர்த்தமற்று போகும் போது காலாவதியான கணங்களும் நம் கண் முன் பளிச்சிடுகின்றன .

            வலிக்கு வண்ணங்களால்  முகப்பூசு பூசினாலும் தேம்பி அழும் உள் அலறல் கிணற்றுக்கு அடியில் கேட்க்கும் சந்தடிகள்தான் நமக்கு .

          குழந்தை மனத்தில் முதல்முதலாக பூக்கும் புரிந்துணர்வுகள் ஒரு புரிதலின் சாயல்தான்  விதை எனும் குறும்படம் .மாறுப்பட்ட குழந்தைகளின் புது உலகம் நிகழ்கால உலகத்தோடு ஒட்டி உறவாட முடியாது தவிப்பதை உணரமுடிகிறது .

      ஒரு ஏழைக்சிறுவனின் கற்பனை உலகத்தில் மலரும் காசுமுளைக்கும் செடியின் ஊடக கல்வியின் சுவசாத் துடிப்பைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ் .ஜி .சிவக்குமார் .    
         
     ஒரு  துளியில்  தன்  வருகையைப் பதிவு செய்யும் மழையைப் போன்றதுதான் குறும்படம் .மழை இயற்க்கை என்றாலும்  உருவாகுவதற்கு எத்தனையோ இரசாயன  மாற்றங்கள்  நடைப்பெறுகின்றன .

      எந்த மழைத்துளி சிப்பியில் சேர்கிறதோ அதுதானே முத்துக்கு மூலதனம் . அந்த வாய்ப்பு சில மழைத் துளிகளுக்கே உண்டு .இது போன்ற கிடைத்துள்ள களமும் காலமும் அளிக்கும்  வாய்ப்பை உடனே பயனாக்கி ஒரு சில குறும்படங்களே சிறப்பாக உருவாக்கப்படுகின்றன.
 
     இப்படியான குறும்படங்கள் அரிதானவை .எ ஸ்.ஜி .சிவக்குமாரின் ''விதை''குறும்படமும் அந்த அரிதான முத்துக்களாக ஒளி சேர்க்கிறது .வெப்பக்காற்று ஓயாத குரல்கொடுக்கும் ,கடுங்குளிர் வாட்டி வதக்கி எடுக்கும் இருதுருவங்கள் ,மனிதர்களை புரட்டி எடுக்கும் சுவடும் ,வறுமையும் கண்ணீரும் மிரட்டும் பதிவும் ,தருமபுரி கரட்டு நிலக் காட்சிகளோடு குறும்படம் துவக்கம் கொள்கிறது .

       ஐ .பி .ஆலன் பிரதீப் மேனுவன் பின்னணி இசையுடன் தன் இரண்டு நண்பர்களுடன் ''விளையாட்டு ''வண்டி ஓடிக்கொண்டே நமக்கு அறிமுகமாகிறான் சிறுவன் வேலு .

   வேலு தொடக்கப்பள்ளி படிக்கும் மாணவன் செய்தி அதுவல்ல .அவன் சிறுவயதிலிருந்து வசதி படைத்தவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து திகைத்து ,அதுபோல தானும் வாழ வேண்டும் எனும்'' உந்துதல் ''உடைய சிறுவனாக நமக்கு அடையாளம் காணப்படுகின்றான்.

   வறிய குடும்பத்தில் பிறந்து ,கூலி வேலை செய்யும் அப்பா ,அம்மா ,தங்கைதான் அவனுடைய உலகம் .சொற்ப பணத்தில் குடும்பம் தட்டுத்தடுமாறி செல்லும் அவலம் .இதில் குடிக்காரத் தந்தையின் ஊதாரித்தனம் .சராசரி தேவைக்காக அம்மாவை மல்லுக்கட்டும் குழந்தைகள் .
தங்கையின் மீது அளவில்லாத பாசம் கொண்டவனாக வேலு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்ட கிராமமான சந்திராபுரம் .

     துறு துறு வென ஓடும் ஓட்டமும் விளையாட்டு குணமும் கள்ளம் கபடம் அறியாத ''வெள்ளை மனம் ''கொண்டவனாக வேலு .
        செழுமை ,வறுமை மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வேறுப்பாட்டை உள்வாங்கி கொள்ள மறுக்கும் குழந்தை உள்ளம் .குறும்படத்தின் சில காட்சிகளில் ,வீதியில் ஐஸ் காரன் வருவதை பார்த்து தன் அம்மாவிடம் ஐஸ் வாங்கி கொடு  என்று கேட்பதும் ,அவள் வறுமையின் கோரப்பிடியில் காசு என்ன செடியிலா காய்க்கிறது பறிச்சு கொடுக்க என திட்ட அவன் அழுது கொண்டே செல்வதை காணும் நமது கண்ணீர் துளிகள் உறைந்து விடுகிறது .

      தனது சராசரி உணர்வுகளைக் கூட வெளிப்படுத்தமுடியாமல் தவிக்கும் தாயின் செயல்பாடுகளை இயல்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் .

      வறுமை உடையவர்களுக்குக் கல்வி ஒரு எட்டாக்கனியாக விளங்குவதையும் ,தன் குடும்ப வறுமையைப் போக்க காசு முளைக்க வைத்தால் தன் வறுமையைப் போக்க முடியும் என அழுத்தமாக நம்பும் இச் சிறுவனின் உலகம் புதிய களமாக நமக்கு காட்சி அளிக்கிறது .

      சிறுவர்களின் உலகம் எப்பொழுதும் அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த மாறுப்பட்ட உலகம் .இதற்கு இயக்குனர் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் .
 
     தர்மபுரியைச் சேர்ந்த திரைப் பட கல்லூரியில் பயின்ற எ ஸ் .ஜி .சிவக்குமார் அவர்களின் முதல் படம் இது என்பதை எளிதாக நம்ப இயலவில்லை .காசு ,விதை போன்று  முளைக்கும் என்ற குழந்தை அறிவை எதார்த்தமான நம்பிக்கையை அடிப்படையாகக்  கொண்டு இக்குறும்படத்தை உருவாக்கியுள்ளார் .

      மாற்று ஊடகமாக குறும்படத்தின் மூலம் அடித்தட்டிலுள்ள மக்களின் வாழ்வியலை மாறுப்பட்ட கோணத்தின் விளிம்பை நம் பார்வைக்கு கொண்டுவந்திருக்கும் அவரது சமூக அக்கறை பாராட்டுக்குரியது .

         தங்கையின் மீது கொண்ட பாசமும் தன் குடும்பத்தை செழுமையாக ஆக்க தன் குல தெய்வத்திடம் உள்ளம் உருகி வேண்டுதல் செய்யும் வேலுவின் ''உள்ள நெகிழ்வு ''இந்தப்  படத்திற்கு கலை நேர்த்தி மிக்க இவரது ஆக்கம் ஒரு சிறப்பம்சமாகும் .

         படத்தின் குறிப்பிடத்தக்க  மற்றோர்  அம்சமாக நிற்கிறது .   ஆர் .ஜவகர் மற்றும் எம் .கௌதம் .ஒளிப்பரப்பு .வெயிலையும் ,மாலை நேரங்களின் மறுவாசிப்பாயும் ,தென்னகீற்று இரவுச்  சந்திரனையும்,காலைக்கதிரவனின் வருகையையும் நிறைந்த'' ஷாட் ''களை ஓவியமாக்கி இருப்பது அவரது தொழில் திறனுக்கு ஒரு சாட்சி .

       ''விதை '' யால் மட்டும் நடமாடும் வேலுவின் கதையை தன் கேமராவுக்குள்
உள்கிரகித்து புதிய பரிணாமத்தைப் புனைந்திருக்கிறார்கள் ஆர் .ஜவகர் மற்றும் எம் .கௌதம் .

       வீட்டிற்குள் கேமரா உறைந்து வேலுவின் தந்தை குடித்துவிட்டு  வந்து தன் மனைவியிடம் சண்டை போடும் காட்சி வீதியின் இயக்கத்தோடு காட்சி படுத்தியிருப்பதிலும் சரி ,காசு செடி முளைத்து பணம் காய்த்து தழைத்து  நிற்கும் கனவு காட்சியும் ,தங்கையின் இறப்பை ஜீரணிக்க முடியாது உடைந்து திணறும் வேலுவின் உள்ள குமுறலையும்,பணம் கிடைத்தவுடன் பெரிய வீடு கட்டி அந்த வீட்டில்'' ஷாவரில்''குளியல் போடும் காட்சி அமைப்பும் என வேலுவின் செயல்பாடுகளைப் பதித்திருப்பதிலும் சரி ஒளிப்பதிவு மிக இயல்பு .

    ஒளிப்பதிவு தரும் அருகாமை உணர்வு ,வேலுவின் குறும்பும் ,பாசத்தில் பரிதவிக்கும் உணர்வும் ,வறுமையில் வாடும் உள்ளத்தின் போராட்டத்தின் பதிவை நமக்குள் முழுமையாக உணர்த்திவிடுகிறது .

     வேலு நிலத்தில் போட்ட காசு முளைக்கவில்லை என்பதை உணரும் போது உடைந்து அழும் அவலம் நம்மை கலங்கடிக்கிறது .கண்ணீர் திரண்டு காசில் விழும் நெருக்கமான காட்சி மிகு அர்த்தம் பொதிந்தவை .

    ஒளியே படம் முழுவதும் வியாபித்திருந்தாலும் இருளின் ஒளி கீற்றும் பதிவும் செய்யப்பட்டு இருக்கிறது .வேலுவின்'' விதை ''பிம்பத்திற்கு இது ஒரு அர்த்த பரிணாமத்தைத் தருகிறது சுகனின் எடிட்டிங் ,வரைகலை எதுவும் மிகைப்படுத்தலின்றி இயல்பாக அமைந்துள்ளது .

   ஐ .பி .அலன் பிரதீப்மேனுவன் என்பவரின் இசைக்கோவை வேலுவின் பேசப்போராட்டத்தினை மெல்லிய இழையாக   புல்லங்குழலால் அப்படியே மொழிப்பெயர்த்து இருக்கிறாள் .ஓர் ஊமையின் மவுன குமுறலை ஓவியமாக கோர்வையாக பின்னணி இசையாக்கியுள்ளார் .                                         
  

          கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களும் இயல்பாக பொருந்தி இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த தொழில்நுட்பமும் ஒரு உயர்வான  மதிப்பை வெளிக்கொண்டு வைத்திருக்கிறது .சிற்சில  குறைகள் இருப்பினும் படத்தின் உள்ளடக்கம் இவற்றை நேர் செய்துவிடுகிறது .

   விளையாட்டு தனமும் ,புரியாத புரிதல்களுடன் வாழும் வேலு குழந்தை உலகத்தின் ஒரு தனிநபர் பற்றி பதிவாக இப்படம் இருந்தாலும் கூட வேறு சில கேள்விகளையும் எழுப்பி நிற்கிறது .

     வறுமையை ஒழித்து கல்வியைச் செழிக்க வைக்க அரசும் சமூகமும் காட்டும் ''மெத்தனம் ''குறித்து வினாக்களை இப்படம் தனக்குள் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது .

     பாடுபட்டு கட்டிய கனவு கோட்டை தன் முன்னாலே சிதறி விழுவதை தாங்குவதற்கு முன் தங்கையின் மரணம் வேலுவை விரத்தியின் விளிம்பிற்கே கொண்டு சேர்த்து விடுகிறது .அழுவதற்கு கூட கண்ணீர் இல்லாத ''சொரணையற்ற'' தேம்பிய முகத்தோடு நம்மை நெகிழ வைக்கிறான் வேலு .
 
     உரிமைகளில் தலைமை வகிப்பது ''சுதந்திரம் '' தனி மனிதனின் வாழ்வாதாரம் கல்வியே .

  கல்வியே ''விதை ''இந்த சமூகம் இளைய தலைமுறைகளின் இதயத்தில் கல்வியே விதைக்க வேண்டும் என அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட ஒரு சித்திரம் .

       படத்தின் நாயகன்'' வேலு ''பரிசுத்தமான ''மழை ''போன்றவன் இந்த சமூக மண்ணில் விழுந்து பரிணாமத்துடன் ஊடாடுவது நிதர்சனமான உண்மைகள் .இந்த ''விதை ''பாறையில் விதைக்கப்பட்டாலும் அது பாறையின் இடுக்கில் தன்னை பதியம் போட்டு கொள்கிறது .

    கல்விதான் காசு முளைக்கும்'' விதை ''என நம் அகக் கண்களைத் திறக்கிறார் இயக்குனர் எஸ் .ஜி .சிவக்குமார் . ''விதை''எனும் இப்படம் முடிவுறுகையில் இதனை உணர இயலும் இந்த அம்சமே இப்படத்தை மண் சார்ந்த கல்வி ஒளி தீபம் ஏற்றும் புதிய இந்தியாவைச் செதுக்கும் விழிப்புணர்வு படங்களில் ஒன்றாக்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை .